11/11/2024
ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் நடந்து, சில தினங்கள்.
மனம் இறுகிப் போய் நடந்து திரிந்த நாட்கள்.
டொக்டர் ஷாபியை அநியாயமாக இழுத்துச் சென்றிருந்தார்கள். எதைத் திறந்தாலும் ஷாபி, ஷாபி, ஷாபி…..
கொழும்பு தேசிய வைத்தியசாலை தியேட்டர்.
என்னோடு நன்றாக பழகிய, கூடவே வேலை செய்யும் சில வைத்தியர்கள், ஒரு குழுவாக நின்று கதைத்துக் கொண்டிருந்தார்கள். நான் அடுத்த வளைவில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். நான் இருப்பது அவர்களுக்கு விளங்காது.
“மச்சான் இந்த ஷாபி …….. பாத்த வேலையப் பாத்தியாடா?”
“ஓம்டா, இவனுகள் தம்பிலா எல்லாரையும் ரோட்ல நாய மாதிரி அடிச்சி கொல்லோனும்டா”
மினுவாங்கொடை பிரதேசத்தில் நடந்த கலவரத்தில், படுகாயமடைந்த ஒரு முஸ்லிம் சகோதரனை, நாலு பேர் சேர்ந்து காலையும் கையையும் பிடித்து தர தர வென்று இழுத்துச் சென்ற போது, “இந்த நாய மாதிரி அடிச்சிக் கொல்லோனும்டா”என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்தேன்.
———————————————
எங்களது 2005ம் ஆண்டு, கொழும்பு மருத்துவ பீட பெட்ச் மேட்களுக்கான வைபர் குழுவில், இனவாதம் பற்றி எரிந்தது. 6 வருடங்கள் கூடவே படித்து, ஒன்றாகவே சாப்பிட்டு, ஊருக்கும் வந்து, காத்தான்குடியானின் அரவணைப்பையும் பார்த்திட்டுப் போன டாக்டர்களும் “தம்பிலாட்ட கேமக் தெண்ட ஓன” என பகிரங்கமாக பதிவிட்ட போது, குழுவிலிருந்து ஒதுங்கி வந்து விட்டேன். (இது வரை அதில் சேரவில்லை)
————————————————
GMOA என்ற வைத்தியர் சங்கம் நினைத்திருந்தால், டொக்டர் ஷாபியின் மீது வைக்கப்பட்ட அநியாயமான குற்றச் சாட்டையும், அதனால் குற்றப் பார்வைகளை எதிர்கொள்ள முடியாமல் கூணித் திரிந்த முஸ்லிம் வைத்தியர்களையும் இலகுவாக பாதுகாத்திருக்க முடியும். தலைமை கள்ள மௌனம் காத்ததோடு, முக்கியமான உறுப்பினர்கள், சோஷியல் மீடியாக்களில் இனவாதத்தை கக்கிக் கொண்டிருந்தார்கள்.
காலையில் எழுந்து, ச்சே இன்டைக்குப் வேலைக்கு போய் என்னென்ன கேள்விகள எதிர்கொள்ளோனுமோ? என வேலைக்குப் போவதையே வெறுத்த நாட்கள் அவை. சிங்கள சகோதரர்களுடன் வேலை செய்த அத்தனை பேருக்கும் இருந்த உணர்வு அது.
———————————————-
நாடு முழுவதும், முஸ்லிம்களின் வீடுகள் சல்லடை போடப்பட்டன. மீன் வெட்டும் கத்தியும் பயங்கரவாத ஆயுதங்களாக காட்டப்பட்டன. அறபு எழுத்து காணப்பட்ட புத்தகங்களும், பல கிதாபுகளும் முஸ்லிம்களின் கைகளாலேயே எரிக்கப்பட்டன. பர்தா போட்டவர்களை ஏற்ற மாட்டோம் என அரச வாகனங்களிலேயே, ஸ்டிக்கர் அடித்து ஒட்டினார்கள். அரச வைத்தியசாலைகளிலிருந்து, பர்தா போட்ட ஒரே காரணத்திற்காக, எமது சகோதரிகள் துரத்தப்பட்டார்கள். தாடியின் அளவை வைத்து பயங்கரவாதிகளாக காட்டப்பட்டார்கள்.
இத்தனையையும் நல்லாட்சி அரசும், அதில் இருந்த, எதிர்க்கட்சிகளில் இருந்த முஸ்லிம் அரசியல் வியாதிகளும் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஒரே ஒரு குரல்- முஸ்லிம் சமூகத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றாதீர்கள், அவர்களும் இந்த நாட்டின் மக்கள்- என தனித்து ஒலித்தது- அதுதான் தோழர் அநுர குமார திசாநாயக்க- AKD.
—————————————————-
வத கொத்து, டாக்டர் ஷாபி, திகன கலவரம், ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் என திட்டமிட்டு ஆட்சியைப் பிடிக்க ஒரு கொலை வெறிக் கூட்டம் கோரத் தாண்டவமாட, அதுக்கும் பைலா வாசித்துக் கொண்டு இருந்தார்கள் சில முஸ்லிம் அரசியல் வியாதிகள். ஜனாதிபதித் தேர்தல் வந்தது. கோத்தாவை சிங்கள மன்னனாக காட்டி, அனைத்து பன்சலைகளிலும் தேர்தல் பிரச்சாரம் நடந்தது.
ஒருவர் வந்தார். ஜனாதிபதியை தீர்மானிக்கும் முஸ்லிம் ஜனாதிபதி வேட்பாளர் என்றார். தேர்தலுக்கு மனுத் தாக்கல் செய்து விட்டு, அவரை சூழ்ந்து நின்று கொண்டு, “அபே ஜனாதிபதி துமாட, ஜெயவேவா” என ஒருத்தர் கத்த, மற்றவர்களும் கத்த, அந்த வீடியோ திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டது.
——————————————————
ஒரு நாள் இரவு டியூட்டியில், ஒரு சேர்ஜரியை முடித்துவிட்டு, தியேட்டரில் இருந்த மைனர் ஸ்டாப் ரூமில் கிடந்த மேசையில் இருந்தவாறு, அவர்கள் ஊற்றித் தந்த ப்ளேன்டியை குடித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு மைனர் ஸ்டாப்
“சேர், நீங்க காத்தான்குடிதானே”
“ஓம்டா, ஏன்?”
“உங்கட ஊர் ஆக்கள் யாரும் ஜனாதிபதி எலக்ஷன் கேக்காகளா?”
“ஓம்டா, அது சும்மா பகடிக்கு”
“பகடிக்கா, இஞ்சப் பாருங்க சேர்”
ஒரு வீடியோவைக் காட்டினார். அவருடைய கிராமத்தில் உள்ள பன்சலையில், எங்களது ஜனாதிபதியை தீர்மானிக்கும் ஜனாதிபதியின் “அபே ஜனாதிபதி துமாட, ஜெயவேவா!” என்ற கோஷம், பெரிய ஸ்கிரீனில் போடப்பட்டு, “தம்பிலா நாட்டையும் பிடிக்கப் போறான்” என்ற பிரச்சாரம் போய்க் கொண்டிருந்தது.
இனவாதம் பேசினால் மட்டுமே வெல்ல முடியும் என்ற தேர்தலில், நாங்கள் தோற்றாலும் பரவாயில்லை, இந்த இனவாதம் பேச மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்து, தேர்தலில் போட்டியிட்டு, படு தோல்வி அடைந்தார் AKD.
——————————————————
தேர்தல் முடிவு வந்து, கோத்தபாய ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்ட நேரத்தில், பேஸ் புக்கை நோண்டிக் கொண்டிருந்தேன்.
“அபே ஜனாதிபதிதுமாட ஜெயவேவா!” என கத்திய அந்த நபரின் கணக்கில், கோத்தபாயவின் படத்தைப் போட்டு, மிஷன் சக்சஸ் என போடப்பட்டிருந்தது. சில நிமிடங்களிலேயே அது அழிக்கப்பட்டது.
கோத்தபாயவின் பதவியேற்புக்கு, இந்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் வேட்பாளர் செல்ல, கூடியிருந்த மக்கள் கூயடித்து விரட்டிவிட்ட சம்பவமும் நடந்தது.
————————————————-
கொரனா வந்தது. இனவாதம் கொழுந்து விட்டெரிந்து, முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரித்துக் கொண்டிருக்க, 20 நாட்களே ஆன ஒரு மகனின் ஜனாசா எரிக்கப்பட, முழு முஸ்லிம் உம்மாவும் உள்ளத்தால் அழுது கொண்டிருக்க, இந்த அநியாயத்தை எதிர்த்து, தனி ஆளாக பாராளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்தார் அநுர. அதே நாளில், ஜனாதிபதியின் இப்தாரில் நோன்பு திறந்து கொண்டிருந்தார்கள், எங்களுக்காக பேச அனுப்பப்பட்ட அரசியல் வியாதிகள். அதையும் சுட்டிக் காட்டியே பேசினார்.
இனி முஸ்லிம்களுக்காக பேச வேண்டுமானால், சுன்னத் பண்ணிக் கொண்டு வந்து பேசு, என தினாவாட்டாக சொல்லிய அரசியல்வாதிகளையே கொண்டாடிய சமூகம்தானே நாம்!
———————————————————
அல்லாஹ்வின் மிகப் பெரிய அருள், மாற்றம் வந்தது. AKD ஜனாதிபதியானார்.
“இப்ப என்னடாப்பா, இனவாதம் எல்லாம் முடிஞ்சா?”
“நம்மட பிரதேச நிர்வாக பயங்கரவாதம் தெரியுமா?”
“எல்லப் பிரச்சின தெரியுமா?”
என, கன்சல்டனாக வந்து இரண்டே மாதத்தில், மூன்று பெட்டிசன்களையும், “நீங்கள் கடமை நேரத்தில் குடி போதையில் இருந்தீர்கள்” என்ற விசாரணையையும் எதிர் கொண்ட என்னிடம் கேட்கிறார்கள் நண்பர்கள்.
அவர்களிடம் சொல்வதெல்லாம்,
“UK இல் பல வெள்ளைக்காரர்கள், பக்கா இன வாதிகள், ஆனால் ஒன்றையும் அவர்களால் வெளியே சொல்லவும் முடியாது, செய்யவும் முடியாது. ஏனெனில் அங்கே சட்டம் அனைவருக்கும் சமம். அதே ஆட்சியை இங்கே தருவோம் என NPP சொல்கிறது. இதை விட வேறென்ன வேண்டும்?”.
இனவாதத்தை மூலதனமாக கொண்டு, அரசியல் மேடைகளில் கத்தித் திரியும், அரசியல் வியாதிகளுக்கு, அதை விட்டால் வேறு வழியே இல்லாமல், இன்னமும் சோனி, தமிழன், சிங்களவன் என உசுப்பேற்றிக் கொண்டிருப்பதை காண்கிறீர்கள்தானே, அவர்களுக்கான கடைசி தேர்தலாக இது அமையட்டும்.
————————————————————-
இந்த தேர்தலில், இவ்வளவு எழுதுவதும் AKD மீதுள்ள ஒரு நன்றிக் கடனுக்காகத்தான். நான் சொல்லும் விடயங்களை, கருத்தால் எதிர் கொள்ள முடியாமல், பேக் ஐடியில் வந்து, எனக்கும் எனது குடும்பத்திற்கும் பச்சை பச்சையாக ஏசுகிறார்கள்.
“உணவையும் கௌரவத்தையும் தருவது, என்னைப் படைத்து, அடி மட்டத்தில் கிடந்த என்னை, இந்த அளவுக்கு உயர்த்தி வைத்துள்ள ஓரிறைவன்தான்” என்ற ஈமான் என்னிடம் உறுதியாக உள்ள போது- வாங்க மச்சான் பாத்துக்கலாம் 😁.
இப்படிக்கு, காத்தான்குடியை சேர்ந்த, உள்நாட்டிலேயே வேலை செய்யும், உள் நாட்டு அரசியலையும், இன வாதத்தையும் நன்கு பட்டறிந்த, எலும்பு மற்றும் மூட்டுகளுக்கான துறை சார் நிபுணர்.
(Kattankudy single)
-இதை பகிர்ந்துவிடுங்கள் நண்பர்களே!
Dr Ahamed Nihaj
MBBS, MD-Orthopaedics, DSICOT, FEBOT, FRCSEd ( Tra & Ortho), FRCS (Eng)
Dr Ahamed Nihaj